இதைப் படிங்க முதல்ல

நமது அமைப்பின் மூலமாக, படித்த மற்றும் படிக்காத மாற்றுத்திறனாளர்கள் அனைவருக்கும் தனியார்துறையைச்சார்ந்த தொழிற்சாலைகள், அலுவலகங்கள் மற்றும் வணிகவளாகங்களில் பணிவாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.எனவே மேற்படி பயனடைய விரும்புவோர் தங்களின் தகுதிச் சான்றிதழ்களி்ன் நகல்கள் மற்றும் சுயவிவரகுறிப்புடன் ஒவ்வொரு மாதமும் நடைபெறும் மாதாந்திர கூட்டத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.
மேலும் மாற்றுத்திறனுடையோர் பற்றிய உடனடித் தகவல்களுக்கு உங்களது செல்பேசியிலிருந்து உங்களது பெயர் மற்றும் மாவட்டம் ஆகியவற்றை 8883448508 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பவும்.

நன்றி அறிவிப்பு பிரச்சாரம்

                    கடந்த 19.08.2008 அன்று தமிழ்நாடு ஊனமுற்றோர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் அனைத்து மாவட்ட மாற்றுத்திறனாளர்களும் ஒன்றினைந்து பதினோரம்சக் கோரிக்கைகளை வழியுறுத்தி ஊர்வலம் சென்றனர்.  அதனை கனிவுடன் பரிசீலித்த தமிழக முதல்வர் அவர்கள் அதில் ஒன்பது கோரிக்கைகளை உடனடியாக ஏற்றுக்கொண்டு அரசாணையும் வெளியிட்டார்.  அதுமுதல் தமிழக முதல்வர் அவர்கள் மாற்றுத்திறனுடையோர்க்காக பல திட்டங்களை அறிவித்துவருகிறார்.  

                     அதற்காக தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கு நன்றிதெரிவிப்பதற்காகவும் அறிவித்த திட்டங்களை நடைமுறைப்படுத்தக் கோரியும் குமரிமுதல் கோட்டைவரை நன்றி அறிவிப்பு பிரச்சாரம் நடத்தப்படுகிறது.

     இந்த பிரச்சார ஊர்வளத்திற்கு தமிழ்நாடு மாற்றுத் திறனுடையோர் கூட்டமைப்பி்ன் தென்மண்டலத் தலைவர் புஷ்பராஜ் அவர்கள் தலைமையேற்று நடத்திச் செல்கிறார்.  அதற்காக ஆறு மூன்றுசக்கர மோட்டார் வாகனங்களில் பனிரெண்டு பேர் கொண்ட குழுவாக கடந்த 10.09.2010 அன்று கன்னியாகுமாரியில் துவங்கிய இந்த பிரச்சார ஊர்வலம் இன்று இரவு சுமார் 8.00 மணியளவில் திருச்சிராப்பள்ளியை அடைந்தது.  திருச்சி வந்த ஊர்வலத்தினை திருச்சிராப்பள்ளி மாவட்ட செயலாளர் மாரிக்கண்ணன், பொருளாளர் வெங்கட்ராமன் மற்றும் சங்க பிரதிநிதிகள் ஆகியோர் கருமண்டபம் பகுதியில் வரவேற்றனர்.
                                    திருச்சிராப்பள்ளி வந்தவர்களை வரவேற்று திருச்சி ஜோசப் கண்மருத்துவ மனையில் இரவு தங்கவைக்கப்பட்டனர்.  அங்கு மருத்துவமனை பணியாளர்கள் ஊர்வலத்தில் வந்த மாற்றுத்திறனாளர்களை பரிவுடன் கவனித்து மகிழ்வுடன் சிற்றுண்டி வழங்கி உபசரித்தனர். இதில் குறிப்பிடத்தக்கவர் மருத்துவமனை கண்காணிப்பாளரின் மூன்றுவயதுகூட நிரம்பாத மகன் சிறுவன் கேலப்.  இரவு பத்தரை மணிக்கு மேல் ஆனாலும் மற்றவர்களுடன் சேர்ந்து தானும் மாற்றுத்திறனாளர்களுக்கு உணவுவழங்கியது அவனது தொண்டுள்ளம் கொண்ட குடும்ப பாரம்பரியத்தை உணர்த்துவதாக இருந்தது.

        இரவு உணவிற்குப்பின்னர் நல்ல சுகாதாரமான இடத்தில் சுத்தமான படுக்கைகள் வழங்கப்பட்டன.  நாளை வழியனுப்பும் நேரத்தில் மாற்றுத்திறனாளர்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாமையும் நடத்திட மருத்துவமனை நிர்வாகம் முடிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

                            நாளை திருச்சியிலிருந்து மீண்டும் புறப்படும் ஊர்வலம் நாளை இரவு விழுப்புரத்தில் தங்கி நாளை மறுநாள் சென்னையைச் சென்றடையும் எனவும் திட்டமிடப்பட்டுள்ளது.  சென்னையில், பயணம் செய்த அனைவரும் முதல்வர் கலைஞர் அவர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது எனவும் ஊர்வளத்திற்கு தலைமையேற்றுள்ள தென்மண்டலத் தலைவர் புஷ்பராஜ் அவர்கள் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment