இதைப் படிங்க முதல்ல

நமது அமைப்பின் மூலமாக, படித்த மற்றும் படிக்காத மாற்றுத்திறனாளர்கள் அனைவருக்கும் தனியார்துறையைச்சார்ந்த தொழிற்சாலைகள், அலுவலகங்கள் மற்றும் வணிகவளாகங்களில் பணிவாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.எனவே மேற்படி பயனடைய விரும்புவோர் தங்களின் தகுதிச் சான்றிதழ்களி்ன் நகல்கள் மற்றும் சுயவிவரகுறிப்புடன் ஒவ்வொரு மாதமும் நடைபெறும் மாதாந்திர கூட்டத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.
மேலும் மாற்றுத்திறனுடையோர் பற்றிய உடனடித் தகவல்களுக்கு உங்களது செல்பேசியிலிருந்து உங்களது பெயர் மற்றும் மாவட்டம் ஆகியவற்றை 8883448508 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பவும்.

தமிழக நிதிநிலை அறிக்கை - 2011-12 ல் மாற்றுத்திறனாளர்களின் நிலை

               சென்னை, ஆக.4 (டிஎன்எஸ்) அரசு வேலைவாய்ப்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவீத இட ஒதுக்கீட்டை உறுதி செய்யும். இதற்கென தலைமைச் செயலாளரின் கீழ், பல்துறை செயலாளர்களைக் கொண்ட ஒரு குழு அமைத்து அனைத்து அரசுப் பணிகளிலும் மூன்று விழுக்காடு இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படுவதைக் கண்காணிக்கும். என்று இன்று (ஆக.4) பேரவையில் பட்ஜெட்டின்போது அறிவிக்கப்பட்டது.

                               தமிழக சட்டப்பேரவையில் இன்று நடப்பு ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் ஓ பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார்.அதில், இந்த அரசு பதவியேற்றதும், உடனடியாக சமூகப் பாதுகாப்புத் திட்டங்களில் ஓய்வூதியம் பெறும் பயனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகையை மாதம் ரூ.500ல் இருந்து ரூ.1000மாக உயர்த்தி வழங்கி வருகிறது. இத்திட்டத்தின் மூலம் 23.95 லட்சம் பயனாளிகள் பயன்பெறுகின்றனர். இந்த அரசு 2011-2012- ஆம் ஆண்டு சமூகப் பாதுகாப்புத் திட்ட ஓய்வூதியர்களுக்காக ரூ.2,842 கோடியை ஒதுக்கியுள்ளது. 
                         இந்த அரசு ஒவ்வொரு வளர்ச்சி வட்டாரத்திலும், முதியோருக்கும், ஆதரவற்ற குழந்தைகளுக்கும், தங்கும் சிறப்பு விடுதிகள் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த வளாகம் ஒன்றை உருவாக்கும். மூத்த மாற்றுத் திறனாளிகளுக்கான இல்லமும் இந்த ஒருங்கிணைந்த வளாகத்தின் ஒரு பகுதியாக இருக்கும். இத்திட்டம் சிறந்த அரசு சாரா தன்னார்வ நிறுவனங்கள் மற்றும் பெரிய தொழில் நிறுவனங்களின் சமூக கடமையின் ஒரு பகுதியாக அவர்களது உதவியுடன் இந்த அரசால் நடைமுறைப்படுத்தப்படும்.    
                             இந்த அரசு வேலைவாய்ப்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவீத இட ஒதுக்கீட்டை உறுதி செய்யும். இதற்கென தலைமைச் செயலாளரின் கீழ், பல்துறை செயலாளர்களைக் கொண்ட ஒரு குழு அமைத்து அனைத்து அரசுப் பணிகளிலும் மூன்று விழுக்காடு இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படுவதைக் கண்காணிக்கும். மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்பட்டு, தனியார் துறையில் பணியமர்த்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.    
                         மனவளர்ச்சி குன்றிய, கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள், தசைச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு வழங்கப்பட்டு வரும் பராமரிப்புத் தொகை இந்த அரசால் ரூ.1000மாக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. மாற்றுத் திறனாளிகளுக்கான திருமண உதவித் தொகையும் மற்ற திருமண உதவித் தொகைக்கு சமமாக வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் ஏராளமான விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளதால் பயனாளிகளின் அனுமதி எண்ணிக்கையில் தற்போது உள்ள உச்சவரம்பு முழுமையாக நீக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. (டிஎன்எஸ்)

No comments:

Post a Comment